Table Of Contents
அல்லாஹுத்தஆலா தனது அடியார்கள் மீது ஒரு நாளைக்கு இரவிலும் பகலிலும் நேரம் குறிப்பிட்ட அடிப்படையில் ஐந்து நேரத் தொழுகையை கடமையாக்கியுள்ளான். இந்தத் தொழுகைகள் நிறைவேற்றப்படுகின்ற நேரங்களில் அடியான் தனது ரப்போடு நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதே அல்லாஹ்வின் இலக்காக இருக்கிறது. ஐவேளைத் தொழுகையையும் ஒரே தடவையில் ஒன்றாகச் செய்துவிட்டு, பின்னர் அதை விட்டும் தூரமாகி விடாது, நேரத்துக்கு நேரம் மரத்துக்கு நீர் ஊற்றுவது போன்று நேரத்துக்கு நேரம் இந்தத் தொழுகையை நிறைவேற்றுவது மனிதனின் உள்ளத்துக்கு இன்றியமையாததாகிறது.
தொழுகைகளை ஒவ்வொரு நேரத்துக்கும் அல்லாஹுத்தஆலா பிரித்து வைத்திருப்பதானது, அடியார்கள் அந்தத் தொழுகைகளை ஒரே நேரத்தில் நிறைவேற்றுவதன் ஊடாக ஏற்படுகின்ற கஷ்டத்தையும், சுமையையும் போக்குவதாகும். ஏனெனில், அல்லாஹுத்தஆலா சட்டம் இயற்றுவதில் மிகவும் சிறந்தவனாக இருக்கின்றான்.
இதனை முஹம்மத் இப்னு உதைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் ‘முகத்திமத்து ரிஸாலத்தி அஹ்காமி மாவாகீத்துஸ்-ஸலாஹ்’ - என்ற நூலில் பாக்கலாம்.
ஐவேளைத் தொழுகைகளின் நேரங்கள் யாவை ?:
« லுஹர் தொழுகைக்கான நேரமானது, சூரியன் உச்சியிலிருந்து விலகியதும் ஆரம்பமாகிறது. ஒரு மனிதனது நிழலானது அவனது நீளத்திற்குச் சம அளவான நிழலாகும் வரைக்கும் அந்த நேரம் தொடர்கிறது. இது ‘அஸர்’ வரை நீடிக்கிறது. அடுத்து, அஸருக்கான நேரமானது சூரியன் மஞ்சள் நிறமாகும் வரை நீடிக்கிறது. ‘மஃக்ரிபு’க்கான நேரமானது, அடிவானத்தின் சென்னிறம் மறையும் வரை நீடிக்கிறது. இஷா தொழுகைக்கான நேரமானது, இரவின் அரைப்பகுதி வரைக்கும் நீடிக்கிறது. ஸுபஹு தொழுகையின் நேரமானது, ஃபஜ்ர் உதயமானதிலிருந்து சூரியன் உதிக்கும் வரைக்குமான நேரம் வரை நீடிக்கிறது. சூரியன் உதித்து விட்டால் எந்தத் தொழுகையும் தொழக்கூடாது. ஏனென்றால், சூரியன் ஷைத்தானின் இரண்டு கொம்புகளுக்கு இடையில் உதிக்கிறது ». (முஸ்லிம் - 612)
இந்த ஹதீஸில் ஐந்து நேரத் தொழுகைகளுக்குமான நேரங்கள் பற்றிய விளக்கம் உள்ளடங்கியுள்ளது. இதன்படி, கடிகார அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு நேரத்தை வரையறை செய்வதானது, நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது. அதற்கேற்ற வகையில் நாங்கள் நேரங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
-
முதலாவது : லுஹர் தொழுகையின் நேரம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். « லுஹர் தொழுகைக்கான நேரம் என்பது சூரியன் உச்சியிலிருந்து விலகி ஒரு மனிதனின் உயரத்தைப் போன்ற அளவை அடையும் வரைக்கும் அஸர் தொழுகை வர மாட்டாது » இவ்வாறுதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் லுஹர் தொழுகையின் ஆரம்பத்தையும் முடிவையும் வரையறுத்துத் தந்துள்ளார்கள்.
லுஹர் தொழுகையின் நேரத்தைப் பொறுத்தவரைக்கும், ‘சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்ததிலிருந்து’ என்பதன் மூலமாக நாடப்படுவது என்னவென்றால், உச்சி வானத்திலிருந்து மேற்குத்திசை நோக்கி சூரியன் நகர்வதைக் குறிக்கும்.
சூரியன் உச்சியிலிருந்து சாய்வதை அறிந்து கொள்வதற்கான செய்முறை வடிவ விளக்கம் (லுஹர் தொழுகையின் நேர ஆரம்பம்) :
உயரமான ஒரு பொருளை திறந்தவெளி ஒன்றில் வையுங்கள். சூரியன் கிழக்கிலிருந்து உதிக்கும் போது அப்பொருளின் நிழலானது மேற்கு நோக்கி இருக்கும். சூரியன் மெல்ல மெல்ல உயர, உயர அந்த நிழலின் அளவு குறைந்து கொண்டு வரும். அவ்வாறு தொடர்ச்சியாக சூரியன் உயர, உயர நிழலின் அளவும் குறைந்து கொண்டே வந்து, அந்தப் பொருளோடு அந்த நிழல் வந்து சேர்ந்துவிடும். பின்பு அந்தப் பொருளின் நிழலானது கிழக்குத்திசை நோக்கி அதிகரிக்கும். அவ்வாறு அந்தப் பொருளின் நிழல் கிழக்குத்திசைப் பக்கமாக வந்து விட்டால் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்துவிட்டது என்பது அர்த்தமாகும். அப்போது லுஹர் தொழுகைக்கான நேரம் ஆரம்பித்து விடும்.
சூரியன் உச்சியிலிருந்து விலகி விட்டதற்கான நேர அடிப்படையிலான அடையாளம் :
சூரியன் உதித்ததிலிருந்து மறையும் வரைக்குமான நேரத்தினை இரண்டாகப் பிரித்தால் வரும் நடுப்புள்ளி நேரம்தான் சூரியன் உச்சியிலிருந்து விலகுவதற்கான நேரம் ஆகும். அதாவது, சூரியன் 06 :00 மணிக்கு உதித்து 6 :00 மணிக்கு மறைகிறது என்று கருதினால், இப்போது சூரியன் உச்சியிலிருந்து விலகும் நேரமானது 12 :00 மணியாகும். சூரியன் 07 :00 மணிக்கு உதித்து 7 :00 மணிக்கு மறையுமானால் சூரியன் உச்சியிலிருந்து விலகுவதற்கான நேரம் ஒரு மணியாகும். (பார்க்க : அஷ்-ஷரஹுல் மும்திஃ 2/96)
லுஹர் தொழுகையின் நேர முடிவானது, சூரியன் உச்சியிலிருந்து சாயத் தொடங்கியதன் பின்னர் உள்ள நிழலானது ஒவ்வொரு பொருளின் அதே போன்ற சம அளவுக்கு (நீளத்தால்) வரும் வரை தொடர்கிறது.
லுஹர் தொழுகையின் நேர முடிவை அறிந்து கொள்வதற்கான செய்முறை வடிவ விளக்கம்:
சற்று முன்னர் நாங்கள் வைத்த அந்தப் பொருளை நாம் அவதானித்தால் உதாரணமாக அந்தப் பொருள் ஒரு மீட்டர் உயரமான அளவைக் கொண்டதாக இருப்பின், சூரியன் உச்சியைக் கடப்பதற்கு முன்னர் அந்த பொருளின் நிழல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதை நீங்கள் காண்பீர்கள். அப்படியே குறைந்து வந்து அதன் மையப்புள்ளியோடு இருப்பதைக் காண்பீர்கள். (பின்னர் அந்தப் புள்ளியில் ஒரு அடையாளத்தை இட்டுக் கொள்ள வேண்டும்). பின்னர் அந்த நிழல் அதிகரிக்க ஆரம்பிக்கும். அப்போது லுஹர் தொழுகையின் நேரம் ஆரம்பித்து விடும். பின்பு தொடர்ந்தும் அந்த நிழல் மெல்ல மெல்ல கிழக்கை நோக்கி அதிகரித்துச் செல்லும். அந்தப் பொருளின் நிழலின் நீளமானது, சமஅளவுக்கு வரும்வரை அதிகரித்துச் செல்லும். அதாவது, அந்தப் பொருளின் நிழல் ஒரு மீட்டர் அளவுக்கு வரும். நாங்கள் ஏற்கனவே இட்ட புள்ளியிலிருந்து ஒரு மீட்டர் அளவை அதன் நிழல் வந்தடையும். புள்ளியிட முன்னர் உள்ள நிழல் கணக்கெடுக்கப்படமாட்டாது. ஏனெனில், இதுதான் ‘Zஸவால்’ என்னப்படுகின்ற சூரியன் உச்சியிலிருந்து விலகியதன் நிழல் ஆகும். இப்போது லுஹர் தொழுகையின் நேரம் முடிவடைந்து உடனடியாகவே அதனைத் தொடர்ந்து அஸர் தொழுகைக்கான நேரம் ஆரம்பித்து விடும்.
இரண்டாவது : அஸர் தொழுகையின் நேரம்.
« சூரியன் மஞ்சள் நிறத்தை அடையாத வரைக்கும் அஸர் தொழுகையின் நேரம் ஆகும் » என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
அஸர் தொழுகைக்கான நேரமானது, லுஹர் தொழுகைக்கான நேரத்தின் முடிவோடு (அதாவது, ஒவ்வொரு பொருளின் நிழலும் அதற்கு ஒத்த சமஅளவை அடையும்போது) ஆரம்பிக்கிறது என்று ஏற்கனவே நாங்கள் பார்த்துவிட்டோம்.
அஸர் தொழுகையின் நேரம் முடிவடைவதற்கு இரண்டு சந்தர்ப்பங்கள் உள்ளன:
- தெரிவு செய்வதற்கு உரிய நேரம் : அதாவது, அஸர் தொழுகையின் நேரம் ஆரம்பித்ததிலிருந்து நபி ஸல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பின்வரும் கூற்றுக்கு இணங்க, சூரியன் மஞ்சள் நிறமாகும் வரைக்குமான நேரம் ஆகும்.
- அஸர் தொழுகைக்கான நேரமானது சூரியன் மஞ்சள் நிறம் ஆகாத வரைக்கும் இருக்கும் » என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அதாவது, சூரியன் மங்கலான நிலையை அடைவதாகும். இதற்கான நேரத்தை வரையறுப்பதில் பருவகால வேறுபாட்டுக்கமைய நேரங்களும் வேறுபடும்.
- அவசரமான நேரம் : அதாவது, சூரியன் மஞ்சள் நிறத்தை அடைந்ததிலிருந்து சூரியன் மறையும் வரைக்குமான நேரம் ஆகும். இதனை நபியவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்கள். « யார் சூரியன் மறைவதற்கு முன்னர் அஸருடைய ஒரு ரக்அத்தை அடைந்து விட்டாரோ? அவர் அஸர் தொழுகையை அடைந்தவராகவே கருதப்படுவார் ». புகாரி - 579, முஸ்லிம் – 608.
அவசரமான நேரம் என்றால் என்ன ? :
ஒருவர் (காயத்துக்கு மருந்து கட்டுதல் போன்ற) முக்கியமானதொரு வேலையில் ஈடுபட்டு, அஸர் தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்ற முடியாமல் போனால், -சூரியன் மஞ்சள் நிறமாகவதற்கு முன்னர் தொழ முடியும் ஆக இருந்த நிலையிலும் அவரின் கஷ்டத்தின் காரணமாக - சூரியன் மறைவதற்கு மிக அண்மித்த நேரத்தில் அவர் தொழுது கொள்ள முடியும். அது அவருக்கு பாவம் ஆகாது. ஏனெனில், அதுதான் அவசியமான (இக்கட்டான) நேரமாகும். ஒரு மனிதன் அஸர் தொழுகை பிற்படுத்தப்படுவதற்கான நிர்பந்தத்திற்குள்ளானால், அவர் சூரியன் மறைவதற்கு முன்னர் தொழுது கொள்வதால் எந்தக் குற்றமும் கிடையாது.
மூன்றாவது: ‘மஃக்ரிபு’க்கான நேரம்.
« அடி வானத்தின் சிவப்புநிறம் மறையாதவரை ‘மஃக்ரிபு’க்கான நேரம் இருக்கும் » என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
அதாவது, அஸர் தொழுகையின் நேரம் முடிவடைந்ததும் உடனடியாக ‘மஃக்ரிபு’க்கான நேரம் ஆரம்பித்து விடுகிறது. அதுதான் சூரியன் மறைந்ததில் இருந்து, அடிவானத்தில் சென்நிறம் மறையும் வரைக்குமான காலப் பகுதியாகும்.
வானத்தில் சென்நிறம் மறைந்துவிட்டால் ‘மஃக்ரிபு’க்குரிய நேரம் முடிவடைந்து, இஷாவுக்கான நேரம் வந்து விடுகிறது.
இதற்கான நேர வரையறை பருவகால மாற்றங்களுக்கு ஏற்ப வேறுபடும்.
எப்போது நீங்கள் அடிவானத்தில் சென்நிறம் மறைந்திருப்பதை காண்கிறீர்களோ, அப்போது ‘மஃக்ரிபு’டைய நேரம் முடிவடைந்துவிட்டது என்பதற்கான சான்றாக அது திகழ்கின்றது.
நான்காவது : இஷாவுக்கான நேரம்.
« இஷா தொழுகைக்கான நேரமானது, மத்திய இரவின் அரைப்பகுதி வரைக்கும் ஆகும்» என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
இதன்படி இஷாவுக்கான நேரமானது, ‘மஃக்ரிபு’டைய நேரம் முடிவடைந்ததோடு ஆரம்பிக்கிறது. (அதாவது, வானத்தில் சென்நிறம் மறைந்ததில் இருந்து இரவின் அரைப்பகுதி வரைக்கும் ஆகும்).
இரவின் அரைப்பகுதியைக் கணிப்பது எப்படி?
பதில்: இரவின் அரைப்பகுதியை கணிக்க விரும்பினால் சூரியன் மறைந்ததில் இருந்து, ‘ஃபஜ்ர்’ உதயமாகும் வரைக்குமான நேரத்தைக் கணித்துக் கொள்ளுங்கள். அதில் அரைப்பகுதி நேரம்தான் ‘இஷா’ தொழுகையின் கடைசி நேரமாகும். (அதாவது, அதுதான் இரவின் அரைப் பகுதியாகும்).
மாலை 5:00 மணிக்கு சூரியன் மறைகிறது என்று வைத்துக்கொண்டால், ‘ஃபஜ்ர்’ருக்கான அதான் காலை 05:00 மணியாக இருக்குமானால், அப்போது இரவின் அரைப்பகுதியானது இரவு 11:00 மணி ஆகும். அத்தோடு, சூரியன் 5 :00 மணிக்கு மறைந்து, ‘ஃபஜ்ர்’ 06 :00 மணிக்கு உதயமாகும் என்றால் இரவின் அரைப்பகுதி என்பது இரவு 11 : 30 மணியாகும்.
ஐந்தாவது : ‘ஃபஜ்ர்’ருக்கான நேரம்.
«சுபஹு தொழுகைக்கான நேரமானது, ‘ஃபஜ்ர்’ உதயத்திலிருந்து சூரியன் உதிக்காத வரைக்கும் இருக்கும். சூரியன் உதித்து விட்டால் தொழுகையை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். ஏனென்றால், சூரியன் ஷைத்தானின் இரு கொம்புகளுக்கு இடையே உதிக்கின்றது» என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
இதன்படி, ‘ஃபஜ்ர்’ருக்கான நேரமானது, இரண்டாவது ‘ஃபஜ்ர்’ரின் உதயத்திலிருந்து ஆரம்பித்து, சூரியன் உதிக்கும் போது முடிவடைகிறது. இரண்டாவது ‘ஃபஜ்ர்’ என்பது, கிழக்கு அடிவானத்தில் வெளிப்படும் வெண்மையைக் குறிக்கிறது. அது வடக்கிலிருந்து தெற்காக பரவிச் செல்லும். முதலாவது ‘ஃபஜ்ர்’ என்பது, இரண்டாவது ‘ஃபஜ்ர்’ருக்கு கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் உதயமாகுவதாகும். அவை இரண்டுக்கும் இடையில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன.
- முதலாவது ‘ஃபஜ்ர்’ நீண்டு செல்லக்கூடியது. ஆனால் அகலத்தால் விரிந்து செல்லாதது. அதாவது, கிழக்கிலிருந்து மேற்குக்கு அது நீண்டு செல்லும். இரண்டாவது ‘ஃபஜ்ர்’ வடக்கிலிருந்து தெற்குப் பக்கமாக அகன்று செல்லும்.
- முதலாவது ‘ஃபஜ்ர்’ ஐப் பொறுத்த வரைக்கும் அது இருட்டாக இருக்கும். அதாவது, முதலாவது ஃபஜ்ரில் வெளிப்படுகின்ற ஒளியானது சிறிது நேரம் இருந்து பின்னர் இருட்டாகி விடும். ஆனால், இரண்டாவது ‘ஃபஜ்ர்’ ஐப் பொறுத்த வரைக்கும் அது மீண்டும் இருட்டாகாது. மாறாக, அதன் ஒளியும் பிரகாசமும் மெல்ல மெல்ல அதிகரித்துச் செல்லும்.
- இரண்டாவது ‘ஃபஜ்ர்’ ஐப் பொறுத்த வரைக்கும் அது அடிவானத்தில் வெளிப்படும். அதற்கும் அடிவானத்துக்கும் இடையில் இருட்டு இருக்க மாட்டாது. ஆனால், முதலாவது ஃபஜ்ர்’ ஐப் பொறுத்தவரைக்கும் அது அடிவானத்திலிருந்து பிரிந்து காணப்படும். அதற்கும் அடிவானத்துக்கும் இடையில் ஒரு இருட்டு நிலவும்.
- பார்க்க : ஷரஹுல்-மும்திஃ 2/107)