Table Of Contents
அதி முக்கியத்துவம் வாய்ந்ததும் தீர்க்கமானதுமான கடமைகளிலும் ஒன்றுதான், ஒரு அடியான் 'ஷிர்க்' என்பதன் அர்த்தத்தையும் அதன் பாரதூரத்தையும் அதன் பிரிவுகளையும் அறிந்துகொள்வதாகும். இதன்மூலம்தான் அவனது 'தவ்ஹீத் எனும் ஓரிறை நம்பிக்கையும் பூரணமடைகின்றது. அவனது இஸ்லாமும் சீர்பெறுகின்றது. அவனது ஈமானும் சரியானதாகின்றது.
எனவே அல்லாஹ்விடமிருந்தே நற்பேறும் அவனிடமிருந்தே தெளிவும் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்திக் கொள்கின்றோம்.
இணைவைப்பின் (ஷிர்க்) யதார்த்தம்
அறிந்து கொள்ளுங்கள்! - அல்லாஹ் உங்களுக்கு நேர்வழியை அருள்பாலிப்பானாக!-
'ஷிர்க்' என்ற பதத்திற்கு மொழி அடிப்படையில், கூட்டுச்சேர்த்தல் / இணையை ஏற்படுத்தல் போன்ற அர்த்தங்கள் வழங்கப்படுகின்றன. அதாவது, ஒருவரை இன்னொருவருக்கு இணையாக ஆக்குவதை இப்பதம் சுட்டிக்காட்டுகின்றது.. உதாரணமாக, அவன் அவர்கள் இருவரையும் (ஷிர்க்) கூட்டுச் சேர்த்தான் என்றால் அவர்கள் இருவரையும் இருவராகக் கருதினான் என்பது அர்த்தமாகும் . அல்லது, அவன் தனது விடயத்தில் இன்னொருவரையும் (ஷிர்க்) கூட்டுச் சேர்த்தான் என்றால், அவன் அந்த விடயத்தை இருவருக்கும் உரியதாக்கினான்.
ஷரீஆ ரீதியாக, அல்லாஹ்வின் ‘ருபூபிய்யத்’ எனும் இரட்சிப்பாற்றலிலும், வணக்க வழிப்பாட்டிலும், ‘அல்-அஸ்மாஉ வஸ்-ஸிபாத்’ எனும் அல்லாஹ்வின் பெயர்களிலும் பண்புகளிலும் அல்லாஹ்வுக்கு இணையாகவோ அல்லது அவனுக்குப் பகரமாகவோ ஏதாவதொன்றை ஏற்படுத்திக்கொள்வதுதான் ‘ஷிர்க்’ எனப்படுகின்றது.
அல்-குர்ஆனில் அல்லாஹுத்தஆலா பல இடங்களில் அவனுக்கு ஈடு இணையையோ, பகரத்தையோ ஏற்படுத்திக் கொள்வதைத் தடைசெய்துள்ளதோடு அவ்வாறு ஏற்படுத்திக் கொள்வோரை நிந்தித்துமுள்ளான் :
“ஆகவே, (இவற்றையெல்லாம்) நீங்கள் தெளிவாக அறிந்துகொண்டே அல்லாஹ்வுக்கு ப் பகரமாக (ஈடு இணைகளை) ஆக்காதீர்கள்.” (2:22)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:
“அவர்கள் அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து (மக்களைத்) திருப்பிவிடும் பொருட்டு அவர்கள் அல்லாஹ்வுக்குப் பகரமாக (பல பொய் தெய்வங்களை) இணையாக்குகின்றனர்”. (14:30)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் இதனை எச்சரித்துள்ளார்கள்:
"அல்லாஹ் அல்லாதோரை அல்லாஹ்வுக்குப் பகரமாக அழைத்த (வணங்கிய) நிலையில் யாராவது மரணித்து விட்டால் அவர் நரகம் நுழைவார்" என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி - 4497, முஸ்லிம் - 92)
ஷிர்க்கின் பிரிவுகள்:
மார்க்கத்தை விட்டும் வெளியேற்றி விடக்கூடிய தன்மை கொண்ட இணைவைப்பும் மார்க்கத்தை விட்டும் வெளியேற்றாத தன்மையுள்ள இணைவைப்பும் இருப்பதாக அல்-குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் எடுத்தியம்புகின்றன. இதனால்தான், அறிஞர்கள் ஷிர்க்கின் வகைப்படுத்தலில் "பெரிய வகை ஷிர்க்" என்றும் "சிறிய வகை ஷிர்க்" எனும் வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர். இவை பற்றிய வரைவிலக்கணங்களைச் சுருக்கமாக முன்வைக்கிறோம்.
முதலாவது: பெரிய வகை ஷிர்க் (الشرك الأكبر ):
அல்லாஹ்வுக்கே உரித்தான விடயங்களான ‘ருபூபிய்யத்’ எனும் இரட்சிப்பு விடயத்திலும் ‘உலூஹிய்யத்’ எனும் தெய்வீகத் தன்மையிலும், ‘அஸ்மாஉ வஸ்-ஸிபாத்’ எனும் அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகள் விடயத்திலும் ஏதாவதொன்றை அல்லாஹ் அல்லாதோருக்காக அமைத்துக்கொள்வதே பெரிய ஷிர்க் ஆகும்.
இந்த வகை ஷிர்க்கானது தெளிவாகவும் இடம்பெறும்:
உதாரணமாக, சிலைகளையும் உருவங்களையும் வணங்குதல், மண்ணறைகளை வணங்குதல், மரணித்தோரையும் கண்ணுக்குத் தெரியாதோரையும் வணங்குதல் போன்றன இவ்வகை ஷிர்க்கில் சேரும்.
அடுத்து இந்த வகை ஷிர்க்கானது மறைவாகவும் இடம்பெற முடியும்: உதாரணமாக, அல்லாஹ் அல்லாத வேறு கடவுள்களிடம் காரியங்களை ஒப்படைத்தல், அல்லது முனாஃபிக் எனும் நயவஞகர்களது ஷிர்க் மற்றும் குஃப்ர் என்பவற்றையும் உதாரணமாகக் குறிப்பிடலாம். இவை மறைவான ஷிர்க்காக இருந்தாலும் இவை போன்ற பெரிய வகை ஷிர்க்கில் ஈடுபடுவோர் மார்க்கத்தை விட்டும் வெளியேறியோராவதுடன் நரகத்தில் நிரந்தரமாய்த் தங்குவோருரமாவர். ஏனெனில், அவர்கள் இஸ்லாத்தில் இருப்பதாக தம்மைக் காட்டிக்கொண்டு தமக்குள் குஃப்ரையும் ஷிர்க்கையும் மறைத்துக் கொள்கின்றனர். ஆகவே, அவர்கள் வெளிப்படையாகவன்றி உள்ரங்கமாக இணைகற்பிக்கும் முஷ்ரிக்குகளாவர்.
மேலும் நம்பிக்கைக் கோட்பாடுகளிலும் இந்த வகை ஷிர்க் இடம்பெறும்:
அதாவது, இந்தப் பிரபஞ்சத்தில் இடம்பெறுகின்ற படைத்தல், உயிர்கொடுத்தல், மரணிக்கச் செய்தல், ஆட்சிபுரிதல் போன்ற ஏதாவதொன்றை அல்லாஹ்வுடன் இன்னொரு சக்தியும் மேற்கொள்கின்றது என நம்புவதாகும்.
அல்லது, அல்லாஹ்வுடன் இணைத்து வழிப்படத் தகுதிவாய்ந்த இன்னொரு சக்தி இருப்பதாக நம்புவதும், ஹலால் ஹராம் விடயத்தில் தான் விரும்பியவாறு அவற்றுக்கு வழிபடுவதும் இதில் அடங்குகிறது. அத்தோடு இறைத்தூதர்களின் மார்க்கத்துக்கு முரண்படுவதாலும் இந்த வகை ஷிர்க் ஏற்படுகின்றது.
அல்லது, அன்பு வைப்பதிலும் கண்ணியப்படுத்துவதிலும் அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பதும் இடம்பெறுகின்றது. அதாவது, அல்லாஹ் மீது அன்பு வைப்பதைப் போலவே படைப்பினங்கள் மீதும் அன்பு வைப்பதால் இது உருவாகின்றது. உண்மையில் இது அல்லாஹ் மன்னிக்காத ஷிர்க் வகையைச் சேர்ந்ததாகும். இந்த ஷிர்க் பற்றித்தான் பின்வரும் வசனத்திலும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்:
“மேலும், அல்லாஹ் அல்லாதவற்றை (அவனுக்கு) இணைகளாக எடுத்துக் கொண்டு, அல்லாஹ்வை நேசிப்பது போல அவற்றை நேசிக்கின்ற பலர் மனிதர்களில் இருக்கின்றனர்….”. (2:165)
அல்லது, அல்லாஹ்வப் போலவே மறைவான விடயங்களை அறியும் ஆற்றல் உள்ள இன்னொரு சக்தியும் உள்ளதாக நம்புவதும் இதில் அடங்கும். வழிகெட்ட சில பிரிவினரான ராஃபிழா, தீவிர ஸூஃபிய்யா, பாதினிய்யா போன்றோரிடம் இந்த ஷிர்க்கான நம்பிக்கை பொதுவாகக் காணப்படுகின்றது. அதாவது, ராஃபிழாக்கள் தமது இமாம்களுக்கு மறைவானவற்றை அறியும் ஆற்றல் உள்ளதாகவும் நம்புவது போல பாதினியாக்களும் ஸூஃபிய்யாக்களும் தமது வலிமார்களுக்கும் அவ்வாற்றல் இருப்பதாகவும் நம்புகின்றனர். மேலும் அல்லாஹ்வுக்கு மாத்திரம் உரித்தான ‘ரஹ்மத்’ எனும் ஆருள்பாலிப்பு வழங்கும் ஆற்றல் உள்ளோரும் இருப்பதாக நம்புவதும் அவர்கள் தமது பாவங்களையும் குற்றங்குறைகளையும் மன்னித்தருள்வதாகவும் நம்புவதும் இவ்வகையிலேயே அடங்குகின்றது.
வார்த்தைகளிலும் இவ்வகை ஷிர்க் இடெம்பெறலாம்:
அல்லாஹ் அல்லாத வேறெவராலும் நிறைவேற்றி வைக்க முடியாத தேவைகளை அல்லாஹ் அல்லாதோரிடம் நிறைவேற்றித் தருமாறு கேட்டு, அவர்களிடம் பாதுகாப்புத் தேடுதல், உதவி தேடுதல், அபயம் தேடுதல், பிரார்த்தித்தல் போன்றன இதில் அடங்குகின்றன. இவ்வாறு அல்லாஹ் அல்லாமல் உதவி தேடப்படும் சக்தியானது நபியாகவோ, மலக்காகவோ, வலீயாகவோ, ஜின்னாகவோ அல்லது அவையல்லாத வேறு ஏதாவது படைப்பினமாகவோ இருந்தாலும் இவ்வகை ஷிர்க்கானது, மார்க்கத்தை விட்டும் வெளியேற்றிவிடக்கூடிய பெரிய வகை ஷிர்க்காகவே திகழ்கின்றது.
அதேபோல, மார்க்கத்தைப் பரிகசித்தலும், அல்லாஹ்வை அவனது படைப்புக்களுக்கு ஒப்பிடுவதும் அல்லது, அல்லாஹ்வுடன் வேறு படைப்பாளன், உணவளிப்பவன், திட்டமிடுபவன் இருப்பதாக நம்புவதும் பெரிய வகை ஷிர்க் ஆகவும் அல்லாஹ் மன்னிக்காத பெரும் பாவமாகவும் காணப்படுகின்றது.
செயற்பாடுகளிலும் இவ்வகை ஷிர்க் இடம்பெறும்:
உதாரணமாக, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுத்துப் பலியிடல், தொழுகை நிறைவேற்றுதல், சிரம்பணிந்து ஸுஜூது செய்தல் போன்றன இதில் அடங்கும். அல்லது, அல்லாஹ்வின் சட்டங்களை புறக்கணித்து விட்டு மனிதர்கள் பின்பற்றுவதற்கான புதிய சட்டங்களை உருவாக்குதல், அதன் படி சட்டமியற்றுமாறு மக்களைக் கட்டாயப்படுத்துதல், முஃமின்களை விடுத்து காஃபிர்களுக்கு உதவுதல் என்பனவும் இவ்வகையையே சாரும். இவை போன்ற செயற்பாடுகள் ஈமானின் அடிப்படைகளையே தகர்த்துவிடுகின்றன. இச்செயல்கள் இஸ்லாம் மார்க்கத்தை விட்டும் வெளியேற்றிவிடக் கூடியனவாகும். இதிலிருந்து அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பானாக!
இரண்டாவது: சிறிய வகை ஷிர்க்
பெரிய வகை ஷிர்கிற்கு இட்டுச் செல்கின்ற அனைத்து வகையான அம்சங்களும் இதில் அடங்கும். அல்லது பெரிய வகை ஷிர்க்கின் எல்லையை அடையாத நிலையில் உள்ள விடயங்களை 'ஷிர்க்' என அல்-குர்ஆனும் ஹதீஸும் குறிப்பிட்டுக்காட்டியவையும் இதில் அடங்கும்.
இவ்வகை ஷிர்க்கானது பெரும்பாலும் இரு வகைகளில் இடம்பெறுகின்றன:
முதலாவது: அல்லாஹ் அனுமதித்திராத சில காரணிகளைத் தொடர்புபடுத்துவதன் ஊடாக ஏற்படக்கூடியது. உதாரணமாக, அல்லாஹுத்தஆலா மார்க்க ரீதியான காரணியாகவோ, விதியாகவோ ஆக்காத நிலையில் மணிக்கட்டில் வளையம் மற்றும் மணிக்கோர்வை போன்ற பொருட்களைப் பாதுகாப்புக் காரணிகளுக்காகவோ அல்லது கண்ணேறுகளிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காகவோ தொங்கவிடுதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இரண்டாவது:
இறைவன் என்ற அந்தஸ்த்தை அடையாத அளவுக்கு சில வஸ்துக்களுக்கு அதிகளவில் மதிப்பளித்தல். உதாரணமாக, அல்லாஹ் அல்லாதோரைக் கொண்டு சத்தியம் செய்தல், அல்லாஹ்வும் இன்னாரும் இல்லாவிட்டால் இது நடந்திருக்காது என்று சொல்தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
அல்-குர்ஆனிலும் ஹதீஸிலும் குறிப்பிடப்படுகின்ற ஷிர்க் பற்றிய தகவல்களை வைத்து பெரிய வகை ஷிர்க்கையும் சிறிய வகை ஷிர்க்கையும் பிரித்தறிந்து கொள்ளக்கூடிய விதிகளையும் அடையாளங்களையும் அறிஞர்கள் வரையறுத்துத் தந்துள்ளனர். அவை பின்வருமாறு:
- குறிப்பிட்ட ஒரு விடயம் தொடர்பாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அது சிறிய ஷிர்க் என தெளிவாகக் குறிப்பிடுதல். எடுத்துக்காட்டாக,
- உங்கள் விடயத்தில் நான் மிகவும் பயப்படுவது சிறிய ஷிர்க் பற்றித்தான். அப்போது ஸஹாபாக்கள்:'அல்லாஹ்வின் தூதரே, சிறிய ஷிர்க் என்றால் என்ன' என்று கேட்டனர். அதற்கு நபியவர்கள்: முகஸ்துதி என்றார்கள். மறுமையில் அல்லாஹ் அடியார்களுக்கு அவர்களின் செயற்பாடுகளுக்கான கூலி வழங்கும் நாளில் மக்களைப் பார்த்து, உலகில் உங்கள் செயல்களை யாருக்குக் காட்டுவதற்காகச் செய்தீர்களோ அவர்களிடம் சென்று உங்களுக்கான கூலிகள் ஏதாவது உண்டா என்று பாருங்கள் எனக் கூறுவான்" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: மஹமூத் இப்னு லபீத் (ரழியல்லாஹு அன்ஹு).
நூல்: முஸ்னத் 27742
இமாம் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஸில்ஸிலதுஸ்-ஸஹீஹா 951 வில் இந்த ஹதீஸை ஸஹீஹ் எனக் குறிப்பிடுகின்றார்கள்.
- ஷிர்க் (شرك) என்ற வார்த்தை "ال " சேர்க்காமல் (نكرة வடிவத்தில்) அல்-குர்ஆனிலும் ஸுன்னாவிலும் இடம்பெற்றிருத்தல். இந்த வார்த்தைப் பயன்பாட்டை பெரும்பாலும் அது வைத்து சிறிய வகை ஷிர்க் என்பதைத்தான் சுட்டுகிறது என்பதை இனங்காணலாம். இது தொடர்பாக, பின்வரும் ஹதீஸைப் போல பல உதாரணங்களைக் குறிப்பிடலாம்.
- ஓதிப் பார்த்தலும் தாயத்துக் கட்டுதலும் வசியம் செய்வதும் ஷிர்க் ஆகும்" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
- -தாவூத்-3883). இமாம் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஸில்ஸிலதுஸ்-ஸஹீஹா (331 ) வில் இந்த ஹதீஸை ஸஹீஹ் எனக் குறிப்பிடுகின்றார்கள்.
இந்த ஹதீஸில் வந்துள்ள ஷிர்க் என்ற வார்த்தையின் மூலம் நாடப்படுவது, சிறிய வகை ஷிர்க்கேயாகும்.
தாயத்து என்பது, சிறார்களுக்கு கண்ணேறு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பளிப்பதாகக் கருதி அவர்களுக்கு மாட்டிவிடப்படும் மாலைகள் போன்றவற்றைக் குறிக்கின்றது.
- அத்திவலா’ எனும் வசியம் என்பது, ஒரு மனைவி தனது கணவனை விரும்ப வைப்பதற்காகவும் ஒரு கணவன் தனது மனைவியை விரும்ப வைப்பதற்காகவும் செய்யப்படும் வேலையே வசியம் ஆகும்.
- குறிப்பிட்ட ஒரு இடத்தில் இடம்பெற்றுள்ள ஷிர்க் எனும் வார்த்தைப் பிரயோகத்திற்கான அர்த்தத்தை ஸஹாபாக்கள் சிறிய வகை ஷிர்க் என விளங்கியிருத்தல். ஏனெனில், ஸஹாபாக்களின் விளக்கம் (சட்டத்திற்காகக்) கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஏனெனில், மனிதர்களில் அவர்கள்தான் அல்லாஹ்வின் மார்க்கத்தை மிகத் தெளிவாக அறிந்தவர்களாவர். அல்லாஹ்வினதும் ரஸூலினதும் நோக்கத்தை சரியாகப் புரிந்துகொண்டவர்கள். இமாம் அபூதாவூத் (3910) ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அறிவிக்கும் பின்வரும் செய்தி இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: "சகுனம் பார்ப்பது ஷிர்க் ஆகும்; ஷிர்க் ஆகும்; ஷிர்க் ஆகும் என்று நபியவர்கள் மூன்று முறை சொன்னார்கள் -எங்களில் யாரும் அதை செய்துவிடக்கூடாது- அல்லாஹ் தவக்குல் மூலமாக அதனைப் போக்கிவிடுகின்றான்". இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள 'எங்களில் யாரும் அதை செய்துவிடக்கூடாது' என்ற வார்த்தையானது, இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அவர்களின் வார்த்தையாகும் என முஹத்திஸீன்கள் விளக்குகின்றனர். இங்குள்ள ‘ஷிர்க்’ என்ற வார்த்தையை இப்னு மஸ்ஊத் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘சிறிய ஷிர்க்’ என விளங்கிக்கொண்டார்கள் என்பதையே அவர்களின் அவ்வார்த்தை காட்டுகின்றது. ஏனெனில், அது பெரிய வகை ஷிர்க் என்றிருக்குமானால் தவக்குல் மூலம் அதனை அல்லாஹ் போக்கிவிடுகிறான் என்பது பொருத்தமற்றதாகிவிடும். ஏனெனில், பெரியவகை ஷிர்க்கினை தவக்குல் மூலமன்றி தவ்பா எனும் பாவமன்னிப்பின் மூலமே போக்கமுடியும்.
- நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே ‘ஷிர்க்’ அல்லது ‘குஃப்ர்’ ஆகிய சொற்களுக்கு அதன் அர்த்தமாக, ‘அது சிறியதுதான் என்றோ பெரியது அல்ல’ என்று விளக்கியிருத்தல். இதற்குதாரணமாக இமாம் புகாரீ (1038) அவர்களும் இமாம் முஸ்லிம் (71) அவர்களும் அறிவிக்கும் பின்வரும் ஹதீஸ் சிறந்த எடுத்துக்காட்டாகும். ஸைத் இப்னு காலிதில்-ஜுனைஹீ அவர்கள் கூறினார்கள்: ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு ஹுதைபியாவில் வைத்து சுபஹ் தொழுகையை நடத்தினார்கள். அன்றிரவு வானம் மழையைப் பொழிந்திருந்தது. தொழுகை முடிந்ததும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களை நோக்கி: "உங்கள் இரட்சகன் என்ன சொன்னான் என்று தெரியுமா" எனக் கேட்டார்கள். அதற்கு ஸஹாபாக்கள்: 'அல்லாஹ்வும் அவனது ரசூலும் தான் அதனை அறிவார்கள்' என்று கூறினர். பின்னர் நபியவர்கள்: "எனது அடியார்களில் முஃமினாகவும் காஃபிராகவும் காலையை அடைந்தோர் உள்ளனர். அல்லாஹ்வின் அருளாலும் கருணையாலும் தான் எமக்கு மழை கிடைத்தது எனக் கூறியோர் என்னை ஈமான் கொண்டு நட்சத்திரத்தை நிராகரித்தோராவர். இன்னின்ன நட்சத்திரங்களால்தான் மழை பொழிந்தது எனக் கூறியோர் என்னை நிராகரித்துவிட்டு நட்சத்திரங்களை ஈமான் கொண்டோராவர்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள ‘நிராகரிப்பு’ என்பதற்கான விளக்கத்தினை, அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் மூலமாக அறிவிக்கப்படும் பின்வரும் ஹதீஸின் மூலம் புரிந்துகொள்ள முடியும்.
"? , , , , ;
அடுத்து, சிறிய வகை ஷிர்க் ஐப் பொறுத்தவரைக்கும் அது வளையம் அணிதல், நூல் போடுதல், தாயத்துக் கட்டுதல் போன்ற வெளிப்படையான செயல்களினாலும் வார்த்தைகளினாலும் இடம்பெறும்.
மேலும் இந்த வகை ஷிர்க் மறைவானதாகவும் இருக்கும். உதாரணம், இலேசான முகஸ்துதி போன்றன.
நம்பிக்கைகளாலும் இந்த வகை ஷிர்க் உருவாகும்:
எடுத்துக்காட்டாக, ஒரு நலவோ தீங்கோ ஏற்படுவதற்கு அல்லாஹ்தான் காரணம் என நம்பாது, அல்லாஹ் ஒரு காரணியாக ஆக்காத நிலையில் ஏதாவதொரு விடயம்தான் அதற்குக் காரணம் என நம்புதல். அல்லது ஒரு விடயத்தில் அல்லாஹ் எவ்வித பரக்கத்தையும் ஏற்படுத்தாத நிலையில் அந்த விடயத்தில் பரக்கத் இருப்பதாக நம்புதல்.
வார்த்தைகளாலும் இந்த வகை ஷிர்க் நிகழும்:
எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட நட்சத்திரம் தான் மழைப்பொழியக் காரணம் என்ற நம்பிக்கை இன்றி இன்னின்ன நட்சத்திரங்கள் தோன்றுவதால்தான் மழை பொழிந்தது என்று கூறுதல். அல்லது சத்தியம் செய்யப்படும் பொருளை கண்ணியமிக்கது என நம்பாமலும் அல்லாஹ்வுக்கு ஈடானது என நம்பாத நிலையிலும் அல்லாஹ் அல்லாதோரைக் கொண்டு சத்தியம் செய்தல். அல்லது அல்லாஹ்வும் நீயும் நாடியவாறு என்று சொல்தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
செயல்களாலும் இவ்வகை ஷிர்க் நிகழும்:
எடுத்துக்காட்டாக, நோய் நொம்பளங்களிலிருந்து விடுபடுவதற்காகவும் அதிலிருந்து பாதுகாப்புப் பெற்றுக்கொள்வதற்காகவும் தாயத்து அணிந்துகொளளல் அல்லது நூல், வளையம் கயிறு என்பவற்றைக் கட்டிக்கொள்தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். எந்தவொரு பொருளையும் அல்லாஹ் அத்தன்மை கொண்டதாக மார்க்க ரீதியாகவோ அல்லது விதியின் படியோ ஆக்காத நிலையில் அவற்றைப் பாதுகாப்புக்கான காரணியாக நம்பும் அனைவரும் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்த முஷ்ரிக் ஆவர். அத்தோடு அல்லாஹ் பரக்கத் ஏற்படுத்தி வைக்காத பொருட்களைக் கொண்டு பரக்கத் தேடுவதற்காகத் தடவுவதும் இதில் அடங்கும். எடுத்துக்காட்டாக, மஸ்ஜிதின் வாயில்களை முத்தமிடல், அதன் தரையைத் துடைத்தல், அதன் மண்ணைக்கொண்டு நோய் நிவாரணம் தேடுதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இவைதான் பெரிய மற்றும் சிறிய வகை ஷிர்க்கின் பிரிவுகளை விளக்கும் சுருக்கக் குறிப்புக்களாகும். இதன் தெளிவான முழு விளக்கத்தினையும் இந்த சுருக்கமான பதிலில் கொண்டுவர முடியாது.
முவுரையாக:
எது எப்படியானாலும் ஒரு முஸ்லிம் ஷிர்க் விடயத்தில் சின்னதாயினும் பெரியதாயினும் அதில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில், அல்லாஹ்வுக்கு மாறாக செய்யப்படும் பாவங்களில் மிகப்பெரியது ஷிர்க் எனும் இணைவைப்பு ஆகும். அத்தோடு, அல்லாஹ்வுக்கு மட்டுமே வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதும் அவனுக்கு மட்டுமே முழுமையாகக் கட்டுப்படுவதும் அவன் தனித்தவன் அவனுக்கு இணையாக யாரும் இல்லை என்ற அல்லாஹ்வின் தூய்மையைப் பேணும் கடமை மீது அடர்ந்தேறும் செயலாகவும் ஷிர்க் உள்ளது.
இதனால்தான், முஷ்ரிகீன்களான இணைவைப்பாளர்களுக்கு நரகம் நிரந்தரமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு மன்னிப்பளிக்க மாட்டான் எனவும் சுவனத்தை அவர்களுக்கு ஹராமாக்கி விட்டதாகவும் அல்லாஹ் அறிவித்துள்ளான்.
இதனைப் பின்வரும் திருமறை வசனங்கள் எடுத்தியம்புகின்றது:
“நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதைத் தவிர (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். எவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகப்பெரும் பாவத்தையே கற்பனை செய்கிறார்கள்”.(4:48)
மேலும் அல்லாஹ் கூறுகினறான்:
„எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ் சொர்க்கத்தைத் தடுத்து விடுகிறான். அவன் செல்லும் இடம் நரகம்தான். (இத்தகைய) அநியாயக்காரர்களுக்கு (மறுமையில்) உதவி செய்பவர்கள் ஒருவருமில்லை.” (5:72)
எனவே, புத்திசுவாதீனமுள்ள மார்க்கப் பற்றுள்ள ஒவ்வொருவருக்கும் ஷிர்க்கிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்வதும் ஷிக்கிலிருந்து தன்னைப் பாதுகாக்கும் படி அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதும் கடமையாகும். நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் செய்த பின்வரும் பிரார்த்தனையை அல்-குர்ஆன் எடுத்துக்காட்டாகச் சுட்டிக்காட்டுகின்றது.
‘‘என் இறைவனே! (மக்காவாகிய) இவ்வூரை அபயமளிக்கும் பட்டணமாக நீ ஆக்கிவைப்பாயாக! என்னையும் என் சந்ததிகளையும் சிலைகளை வணங்குவதில் இருந்து தூரமாக்கி வைப்பாயாக!” (14:35)
இதனால்தான், "இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பின் இந்த சோதனையைப் பயப்படாமல் யார்தான் இருக்க முடியும்" என சில ஸலபுகள் கூறியுள்ளனர்.
உண்மையான நல்லடியான் ஷிர்க் விடயத்தில் அதிக அச்சமற்றிருக்கமாட்டார். அத்தோடு இந்த ஷிர்க்கிலிருந்து தன்னை தன் இரட்சகனே காக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார். அதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது ஸஹாபாக்களுக்குக் கற்றுக்கொடுத்த பின்வரும் மகத்தான துஆவை அல்லாஹ்விடம் செய்துகொள்வார்.
"உங்களுக்கிடையில் ஷிர்க் ஆனது எறும்புகளின் இரைச்சலை விட மிக மறைவாக இருக்கும். ஆகவே, நான் உங்களுக்கு ஒரு விடயத்தைக் கற்றுத் தருகின்றேன்; அதனை நீங்கள் கடைப்பிடித்தால் உங்களை விட்டும் பெரிய ஷிர்க்கும் சின்ன ஷிர்க்கும் நீங்கி விடும் எனக் கூறிவிட்டு, "அல்லாஹ்வே நான் அறிந்துகொண்டே உனக்கு எதனையும் இணை கற்பிப்பதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். நான் அறியாமல் செய்பவற்றுக்கும் உன்னிடம் பாவமன்னிப்புத் தேடுகின்றேன்" என்ற அர்த்தமுள்ள
اللَّهُمَّ إنِّي أعوذُ بكَ أنْ أُشرِكَ بكَ وأنا أعلَمُ وأستَغفِرُكَ لِمَا لا أعلَمُ என்ற துஆவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக்கொடுத்தார்கள். இமாம் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் 'ஸஹீஹுல்-ஜாமிஉ' நூலில் (3731) ஸஹீஹ் எனக் குறிப்பிடுகின்றார்கள்.
இது வரை சுட்டிக்காட்டிய வேறுபாடுகள் 'சின்ன ஷிர்க்' மற்றும் 'பெரிய வகை ஷிர்க்' ஆகியன பற்றிய யதார்த்தம் தொடர்பானதும். அத்தோடு ஒவ்வொரு பிரிவுகள் பற்றிய வரைவிலக்கணமும் அதன் வகைகள் பற்றிய விளக்கங்களுமாகும்.
இவற்றுக்கு மேலதிகமாக, அவ்விரு வகைகள் பற்றிய சட்ட சட்ட ரீதியான வேறுபாடுகளும் உண்டு:
'பெரியவகை ஷிர்க்' ஆனது இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றி விடக்கூடியது. அக்காரியங்களில் ஈடுபடுபவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவனாகவும் முர்தத் நிலைக்குள்ளானவனாகவும் தீர்ப்பளிக்கப்படுவான். இதன்படி அவன் காபிராகவும் முர்தத் ஆகவும் இருப்பான்.
'சிறிய ஷிர்க்' ஐப் பொறுத்த வரைக்கும் அது இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றி விடும் தன்மைகொண்டதல்ல. ஒரு முஸ்லிமிடம் இவ்வகையான விடயங்கள் இருந்தாலும் அவன் இஸ்லாத்தில் நிலைத்திருக்கும் முஸ்லிமாகவே இருப்பான். என்றாலும் அவன் பாரியதொரு ஆபத்திலிருப்பவனாவான். ஏனெனில், 'சின்ன ஷிர்க்' கானது பெரும்பாவங்களில் ஒன்றாகும். இது பற்றி இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்: "அல்லாஹ் அல்லாதோரைக் கொண்டு உண்மை சத்தியம் செய்வதை விட அல்லாஹ்வைக் கொண்டு பொய் சத்தியம் செய்வதை நான் விரும்புகின்றேன்".
அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்: அல்லாஹ் அல்லாதோர் மீது சத்தியம் செய்வதானது (அது சின்ன ஷிர்க்) அல்லாஹ்வைக் கொண்டு பொய் சத்தியம் செய்வதை விட அசிங்கமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த இடத்தில் அல்லாஹ்வின் மீது பொய் சத்தியம் செய்வதானது பெரும் பாவங்களில் ஒன்று என்பது கவனிக்கத்தக்கது.
ஆகவே, அல்லாஹ்வை நாம் சந்திக்கும் வரை அவனது மார்க்கத்தில் எமதுள்ளங்கள் நிலைத்திருக்க அவனை இறைஞ்சுவோம். நாம் வழிகெட்டு விடாமலிருக்க அவனது கண்ணியத்தைக் கொண்டு பாதுகாப்புத் தேடுவோம். அவன்தான் மரணமே இல்லாத நித்திய ஜீவன் ஆவான். ஆனால், மனிதர்களும் ஜின்களும் மரணித்து விடுவர்.
அல்லாஹ்தான் மிக அறிந்தவனும் சிறந்த நுட்பமானவனுமாவான். அவன் பக்கம் தான் மீட்சியும் ஒதுங்கும் தளமும் உண்டு.